மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு

மிளகு நாவல் – ஜெருஸுப்பா, ஹொன்னாவர், எட்டாக்கனி

வீட்டு வளாகத்தில், வீடு நிற்கும் இடத்துக்குப் பின்னால் இன்னும் நாலு வீடு கட்ட முடியுமளவு நிலம் இருந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு நேரே தெற்கில் இருந்த இந்த நிலப்பரப்பும் சுத்தம் செய்யப்பட்டு பந்தல் வேய்ந்து கல்யாணத்துக்கான போஜனசாலை ஆனது. இன்றிலிருந்து நாளை மறுநாள் கல்யாணம் முடிந்து, அதற்கடுத்த நாள் முளைப் பாலிகை கரைத்து முடியும்வரை இனி விருந்து இங்கேதான். அப்புறம் மாப்பிள்ளை, மருமக்கள் தாயம் என்ற அலியசந்தான நடைமுறைப்படி பெண் வீட்டுக்குக் குடி வந்து விடுவான். அது அடுத்த வாரம் நல்ல நாளான புதன்கிழமையன்று.

மாப்பிள்ளை உறவுக்காரர்களுக்கு விருந்து அறிவித்த பெண்வீட்டு உறவினர் கோஷ்டியில் மாமண்டுவும் இருந்தான். எல்லோரும் சந்தோஷமாக இருக்க, கொரகொரவென்று இருந்தார் அந்த சிடுமூஞ்சி உறவினர்.

அடுத்த புதன்கிழமை நல்ல நாளா? வியாழன் அதைவிட நல்ல நாள். அவர் கம்பீரமாகச் சொன்னார்.

வியாழக்கிழமை அமாவாசையாச்சே என்றார் ஐயர் குடுமி முடிந்தபடி.

அதான் சொல்றேன், ரொம்ப நல்ல நாள்.

தமிழ் பேசும் மண்ணில் அமாவாசை சுப தினம், கர்னாடகத்தில் அப்படி இல்லை. அந்தக் குழப்பம் தீர்த்து வைத்தது ஐயர் தான். புதனே நல்ல நாள் என்று முடிவானது. என்றாலும் சிடுசிடுப்பு கொஞ்சம் மீதி இருந்தது. ஜெருஸப்பா என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளமுடியாத ஏமாற்றமோ என்று மாமண்டு சந்தேகப்பட்டான்.

அவர் ஜெரஸோப்பான்னா என்ன அர்த்தம்னு கேட்டார். எனக்கு தெரியலே என்றான் மாமண்டு.

தெரியாம என்ன? சொக்கப்பா, இப்படி உக்காரும்.. பைரவ ஷெட்டி எதிர் இருக்கையைக் காட்டினார். அவர் ஒரு வெற்றிலையை எடுத்து சாவகாசமாக மென்றார். சொல்ல ஆரம்பித்தார்-

நாட்டு முந்திரி இருக்கு இல்லே, போர்த்துகல் இறக்குமதி இல்லே, நாட்டு முந்திரி, பல்லாதகா அப்படீன்னு சமஸ்கிருதத்திலே சொல்வாங்க. தமிழ்லே கிட்டாக்கனி. மலையாளத்துலே அலக்குசேறு. அது கன்னடத்திலே ஜெரு அப்படீன்னு சொல்றோம். ஸொப்புங்கறது கன்னடத்தில் இலை அப்படீன்னு பொருள்படும். ஜெருஸொப்பூர் அதாவது முந்திரி மர தோப்பு இருந்த இடம் ஜெருஸப்பூர், ஜெருஸப்பா ஆச்சு. சமஸ்கிருதப் பெயர் அடிப்படையில், பல்லாதகிபுரம்னு ஜெருஸுப்பாவுக்கு இன்னொரு பெயர் உண்டு. ஹொன்னாவர் பெயர்க் காரணம் தெரியுமா? கன்னடத்திலே ப பெரும்பாலும் ஹ ஆகிறது உண்டே. ஹொன்னு அப்படீன்னா பொன்னு. ஹொன்னாவர் பொன்னாவரம். அங்கே போர்த்துகீசியர்கள் மிளகு, சாயம் தோய்த்த துணி, ஏலம், லவங்கம் இப்படி நம்மவர்கள் கிட்டே வாங்கிக்கிட்டு அதற்கான விலையாக பொன்னைக் கொடுப்பாங்க. ஆகவே அந்த இடம் ஹொன்னூர். ஹொன்னவர். துறைமுக நகரம். புரிஞ்சுதா?

பைரவ ஷெட்டி இன்னொரு வெற்றிலை போட்டுக்கொள்ள, தரையில் உட்கார்ந்து கேட்டுக் மாமண்டு எழுந்து ரொம்ப நல்லா சொன்னீங்க ஐயா என்றபடி சொக்கப்பாவைப் பார்த்தான். அவர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்த படிக்கே உறங்கிப் போயிருந்தார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன