பெரு நாவல் ‘மிளகு’ – Partition of the kingdom to result in a moth eaten Gerusoppa

An excerpt from my forthcoming novel MILAGU

இவர்கள் கோரிக்கைதான் என்ன? பின்வரிசை பிரதானி ஒருவர், வேங்கடபட்டர் என்ற பெயர், குரல் கீச்சிட சொல்கிறார். மற்ற குரல்கள் தேய்ந்து மறைய, வகுளர் என்ன சொல்கிறார் கேட்போம் என்கிறாள் மகாராணி.

அப்படியானால், கேட்க நேரமும் மனமும் இருந்தால் அன்போடு ராணியிடம் வைக்கும் கோரிக்கை

வகுளன் ஆரம்பித்து ஒரு நொடி தாமதித்துத் தொடர்கிறான் – அரசாளும் பூமியில் ஒரு பகுதி நேமிநாதருக்குக் கைமாற்ற வேண்டும். ஜெருஸூப்பாவும், கோகர்ணமும் அரசியார் தொடர்ந்து ஆட்சி செய்ய, அவருக்கு உட்பட்டு ஹொன்னாவர் நேமிநாதரின் கவனிப்புக்கு வரும். மிர்ஜான் கோட்டை இருவரின் கூட்டாட்சியில் வரும்.

நிச்சயமாக முடியாது. கருங்கல் கருங்கல்லாக நான் பார்த்துப் பார்த்துக் கட்டியது மிர்ஜான் கோட்டை. ஒவ்வொரு சுவருக்கும் ஒவ்வொரு கதவுக்கும் கோட்டை புல்தரைக்கும் என்னைத் தெரியும். எங்கே பயணம் போனாலும் ராத்தங்க கூடு நோக்கிப் போகும் பறவை போல் மிர்ஜான் கோட்டைக்கு ஓடி வருகிறவள் நான். மிர்ஜானை கூட்டாட்சி செய்ய என்ன அவசியம் இப்போது? ஹொன்னாவரும் ஜெருஸூப்பாவும் மாநிலத்தின் முக்கிய துறைமுகங்கள். அதைத் துறந்து நான் என்ன ஆட்சி செய்ய வேண்டியிருக்கு?

சரி இப்படி வைத்துக்கொள்ளலாமா? வகுளன் நைச்சியமாகக் கூறினான். ஜெருஸொப்பாவும் கோகர்ணமும் நேமிநாதரின் கண்காணிப்புக்கும் நிர்வாகத்துக்கும் வரட்டும். மற்ற பிரதேசங்கள் ராணியம்மாள் ஆட்சியில் தொடரட்டும். கோட்டை கூட்டாட்சியில் வரட்டும்.

நிச்சயமாக உடன்பட முடியாது. நீங்கள் போகலாம். அவை கலைகிறது.

ராணி சென்னபைரதேவி உறுதியாகக் கூறத் தொடங்கி குரல் நடுங்க முடித்தாள்.

கோரிக்கையைச் சொன்ன மாத்திரத்திலேயே இத்தனை படபடப்பும் அவசரமுமாக எதுவும் தர முடியாது என்று மறுப்பது வேடிக்கையாக உள்ளது. அதுவும் முழுக் கோரிக்கையையும் என்ன என்று கேட்கப் பொறுமை இன்றி

வகுளன் சிரித்தபடி சொன்னான்.

வகுளரே வேறு என்ன கேட்கிறீர் கேளுங்கள் நியாயமானது என்றால் ஆவன செய்ய்யப்படும் என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி.

பட்டர் பிரதானி முன்னால் வந்து கிரீச்சிட்டார் – வகுளர் கிருஷ்ண பரமாத்மா இல்லை. நேமிநாதன் பாண்டவர் இல்லை.

அவர் முடிப்பதற்குள் அடிபட்ட வேங்கையாக சென்னபைரதேவி சீறினாள்.

ஆம், நான் தான் துரியோதனன். கொடுமைக்கார துச்சாதனன். நூற்றுவரில் இதரரும் நான் தான். போகட்டும். வேறு என்ன கேட்கிறீர்?

தொடங்கி நடந்து கொண்டிருக்கும், தொடங்க நாள் குறிக்கப்பட்ட மத வழிபாட்டு இடங்களான பசதிகள், கோவில்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு இன்னும் செலவு பிடிக்கும் எவ்வளவு வேலை பாக்கி உண்டு என்று கணக்குப் பார்த்து நிதிநிலைமையை கருத்தில் கொண்டு ஒன்று ரத்து செய்யப்பட வேண்டும்.

அரசி உதடு துடிக்க அவனைப் பார்க்க, வகுளன் தொடர்ந்தான் – அல்லது ஒரே வருடத்தில் கட்டி முடிப்பதற்குப் பதிலாக ஏழெட்டு வருடத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற பகுதி பகுதியாக நிதி அளிக்கப்பட வேண்டும்.

முடியாது என்று தலை குலுக்கினாள் சென்னா. கையில் பிடித்த ரோஜா அத்தர் நனைத்த துணியை முகத்தில் அழுத்தமாக வைத்துப் பிடித்தபடி இரண்டு நிமிடம் இருந்தாள். மெல்லத் துணியைக் கையால் முகத்தில் ஒற்றிக் கொண்டு வகுளனை இகழ்ச்சி தொனிக்கப் பார்த்தாள்.

pic An Unani medicine man

ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன