அரசூர் நாவல் நான்காவது – வாழ்ந்து போதீரே. அடுத்த சிறு பகுதி நாவலில் இருந்து
ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.
சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும் ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக் கொடியில் பறக்கும் பூமி அது. கேரளா போல.
பெரியம்மா ஆப்பிரிக்கப் பயணம் போக, இங்கே வந்த தூதுவர் வைத்தாஸ் ரெட்டி மூலம் அழைப்பு வந்திருக்கிறதாக திலீப்புக்குத் தெரியும். அப்படியே ஐரோப்பாவிலும் பயணப்பட, தில்லியில் மினிஸ்டர் கணவர் மூலம் அவள் முயற்சி எடுப்பதும் தெரியும். கொங்கணிப் பெண் சரச விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரியப்பா அவளை ஐரோப்பா அனுப்ப மும்முரமாக முயற்சி செய்வார் என்பது கூடத் திலீப்புக்குத் தெரியும்.
பத்து நாள் என்றால் பத்து நாள். பெரியம்மா உலகம் சுற்ற, பெரியப்பா நேரு நினைவுகளை கொங்கணி வாசனை மணக்க மணக்க அந்தச் சிவத்த ரெட்டை நாடிப் பெண்ணின் தேகத்தில் இருந்து ரசனையோடு அகழ்ந்தெடுப்பார். நடாஷா தயவில் சோவியத் பயணமும் பெரியம்மாவுக்கு வாய்த்தால், கொங்கணி மாமிக்கு அவர் ஒரு நல்ல நாளில் கர்ப்ப தானமும் செய்யக் கூடும். திலீபுக்கு எல்லாம் தெரியுமாக்கும். ஜனனியிடம் சொன்னால் சிரிப்பாள்.
யாரும் எங்கேயும் போகட்டும். யாரோடும் கூடிக் குலாவட்டும். அவனுக்குச் செய்ய வேலை இருக்கிறது. நடாஷாவை எரணாகுளம் கூட்டிப் போகணும்.
மழை நேரத்து ஆட்டோ கிடைக்க வழக்கம் போல் சிரமமாக இருந்தது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயம் – ஆட்டோ டிரைவருக்கு நல்ல மனது இருந்து, சவாரி போகலாம் என்று முடிவு செய்தால், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதமே இல்லாத இடம். சரியான தொகைக்கு மேல் ஒரு காசு கூடக் கேட்க மாட்டார்கள் யாரும். அரிவாளும் சுத்தியலும் கற்றுக் கொடுத்த சத்திய வழி என்று பெருமிதத்தோடு போன வாரம் ஒரு வண்டியோட்டி சொன்னார். ஆனால் பாதி வழியில் அவருடைய ஆட்டோ ரிக்ஷா நின்று போனது.
ஆலப்புழை போகணும். ஆட்டோ வருமா?
கண்ணில் பட்ட வாகனத்தை நிறுத்த, ஓட்டி வந்தவன் எதிர்க் கேள்வி கேட்டான் –
சேட்டன் அங்கே ஓட்டலில் தங்கியிருக்கற மதாம்மாவைக் கூட்டிட்டு இங்கே வந்து மயில்பீலி தூக்கம் படிப்பிக்கணும். அதானே? அலைச்சல் இல்லாம மதாம்மா இங்கேயே ஜாகை ஏற்படுத்திக்கலாமே? பெட்ரோல் மிச்சம் கூட.
அது சரி, ஆனால் இன்னிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்.
திலீப் கர்ம சிரத்தையாக விளக்கம் சொன்னான்.
ரயில்வே ஸ்டேஷனா, அதுவும் பக்கம் தான். டிரைவர் உற்சாகமாகக் கூறினான்.
ஆனா நான் போய்க் கூட்டிப் போகணுமே.
விடாது, திலீப் மேலும் விளக்கினான்.
நல்ல வேளை, பஸ்ஸில் ஆலப்புழை போய் அங்கே ஓட்டலில் இருந்து பொடி நடையாக நடாஷாவை ரயில் ஏறக் கூட்டிப் போகலாமே என்று கேட்காமல் ஆட்டோ திலீப்பை ஏற்றிக் கொண்டு ஆலப்புழை கிளம்பியது.
நடாஷா இருந்த ஆலப்புழை ஓட்டலுக்கு முன் சேறும் சகதியுமாகக் கிடந்தது. அங்கங்கே மரப் பலகையைத் தரையில் இட்டு வைத்திருந்தது கண்ணில் பட்டது. அதன் மேல் ஜாக்கிரதையாகக் கால் வைத்த, தலை குளித்த பெண்கள் நோட்டுப் புத்தகம் சுமந்து பக்கத்தில் காலேஜுக்கோ, தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கோ போய்க் கொண்டிருந்தார்கள். மழையும் வெள்ளமும் சகதியும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கும் அவர்களுக்கு.
திலீப்பும் மழை சுழன்றடிக்கும் பிரதேசத்தில் இருந்து வருகிறவன் தான். மராத்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் மழையை வரவேற்பது சகல கவனமும் எடுத்து. திலீப்புக்கு அதில் அசாத்தியப் பெருமை. மழைக்காலத்தில் பம்பாய் எலக்ட்ரிக் ரயிலில் போவதை விடவா இதெல்லாம் பெரிய விஷயம்?
இல்லல்லோ என்று எதுக்கோ சொல்லி தங்களுக்குள் சிரித்துப் போன பெண்களைத் தொடர்ந்து திலீப் மரப் பலகையில் கால் வைக்க, வழுக்கி சேற்றில் இரண்டு காலும் அழுத்த நின்றான்.
நல்ல வேளை. ஓட்டல் மேனேஜர் அவனைப் பார்த்திருந்தார். மதாம்மா அகத்து உண்டு என்று எதிர்பார்ப்புகளோடு தினம் செய்தி அளிப்பதை அவர் கடமையாக ஆற்றுகிறவர். இவன் நடாஷா இருந்த அறைக்குள் போய் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அப்புறம் அவளோடு வெளியே போகும் போது எதற்காகக் கூர்ந்து பார்க்கிறார், எங்கே பார்க்கிறார் என்று திலீபுக்குத் தெரியும். அவரைப் போய்க் கேட்கவா முடியும்? அதுக்கெல்லாம் பத்து நிமிஷம் போதாதா என்று பதிலுக்குக் கேட்கக் கூடியவர். போதும் தான்.
யங் மேன், கொஞ்சம் நில்லு. ஆபீஸ் பாய் வெள்ளம் ஒழிப்பான்.
அவர் அவனை வாசலிலேயே நிறுத்தி விட்டார். சகதிக் காலோடு நடாஷாவை இவன் கட்டிலில் கிடத்திக் கலந்தால் படுக்கை விரிப்பும் தலையணையும் ஏன் அறையுமே சேறும் சகதியுமாகி விடாதா என்ற கரிசனம் திலீப்புக்குப் புரிந்தது.
மாடிப் படிக்கட்டில் விரித்த எத்தனையோ வருஷம் பழையதான கம்பளத்தில் ஈரக் கால்களை மணலோடு ஒற்றி ஒற்றிக் கடந்து, அவன் இரண்டாம் மாடியில் நடாஷா இருந்த அறைக்கு முன் நின்றான்.
ஆகக் குறைந்த உடுப்பில் கதவைத் திறந்தாள் அவள். அந்த அறையே உள்ளிப் பூண்டு வாடை சூழ்ந்து இருந்ததாக திலீப் நம்பத் தொடங்கி இருந்தான்.
உட்காரு, குளிச்சுட்டு வந்துடறேன்.
நடாஷா உள்ளே போனாள்.
ஒற்றை நாற்காலியில் மார்க் கச்சு தொங்கிக் கொண்டிருந்தது. விரித்து வைத்திருந்த ஈரமான பெரிய ஸ்கர்ட் பாதிக் கட்டிலை அடைத்துத் தரையில் வழிந்தது. ஈரத் துணி வாடையையும் சேர்த்து மேலே சீலிங் ஃபேன் பரத்திக் கொண்டிருந்தது. மீதிக் கட்டிலில் அரையில் உடுத்தும் பெண்கள் உள்ளாடை, கறுப்பு நிறத்தில். அதைத் தொட்டபடி, பாதி சாப்பிட்ட ரொட்டியும் ஆம்லெட்டுமாகப் பீங்கான் தட்டு. ஓரமாக காலி தேநீர்க் கோப்பை, எந்த நிமிஷமும் தரைக்குக் கவிழக் கூடும் என்ற நிலையில். எங்கே உட்கார?
யோசித்து ஏதோ குறுகுறுப்போடு நாற்காலி நுனியில் தொடுக்கினாற்போல் அமர்ந்தான். ஒரு வினாடி தான். சுற்று முற்றும் பார்த்து விட்டு நன்றாகப் பின்னால் சாய்ந்தான். இரண்டு தோளையும் தழுவிப் படர்ந்த, உடுத்து விழுத்துப் போட்ட மார்க்கச்சையின் ஒச்சை வாடை அவனுக்கு வேண்டி இருந்தது.
அகல் செல்லம் அகல் கண்ணம்மா
அவன் அந்த மார்க்கச்சையைப் பின்னால் இருந்து எடுத்து ஆவேசமாக முகம் புதைத்துக் கொண்டான். வேண்டி இருந்தது. இன்னும் கூட.
பதுங்கிப் பதுங்கி, முன்னால் ரெண்டு அடி வைத்து கறுப்பு உள்ளாடையை ஆசையாகப் பற்றி எடுக்கும் போது குளியலறைக் கதவின் இறுகிக் கிடந்த தாழ் திறக்க முயற்சி செய்வதின் ஓசை. எடுத்ததை அப்படியே போட்டு விட்டு திலீப் அசதியோடு நாற்காலியில் உட்கார்ந்தான். சந்தன சோப்பும் பூண்டும் மணக்க நடாஷா, ஒரு டர்க்கி டவல் உடுத்து, மேலே சன்னமான துண்டு போர்த்தி, குளியலறைக்கு உள்ளே இருந்தபடிக்கு அவனைக் கை சுண்டி அழைத்தாள்.
என்னடி ஆம்பளைப் பிசாசே?
அவன் தமிழில் கேட்டதால் தப்பித்தான். தரையில் கிடக்கும் மார்க் கச்சையை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி கேட்டாள் நடாஷா. அப்படியே கட்டிலில் கிடக்கும் உள்ளாடையும் வேணுமாம்.
வெட்கமே இல்லியாடி முண்டே?
திலீப் சற்றே கை நடுங்க அந்த உடுப்புகளை எடுக்கும்போது திரும்ப உடலில் கிளர்ச்சியும் அகல்யா நினைப்பும் பரவியது. கல்யாணம் முடிந்து ரெண்டே நாள் அவளோடு சுகித்திருந்தபோது கிளர்ந்தெழுந்து, அவள் தேகம் வியர்ப்பில் துப்பிக் கிறுகிறுக்க வைத்த கறிவேப்பிலை மணமும்.
குளிரக் குளிர நின்ற நடாஷா இரண்டு துணியையும் வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
என்ன யோசனை?
அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.
அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.
அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.
எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?