இவன் மட்டும் கத்தோலிக்கனாக இருந்தால் குரிசுப் பள்ளியில் அவனுடைய நல்ல குணங்களை, வயிறு சரியாக இயங்கிய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்த்தும் பிரசங்கத்தில் எடுத்துச் சொல்லி அவனுக்காகப் பிரார்த்தித்து இருப்பார்.
இப்போதும் அவனுக்காக மன்றாட என்ன தடை? எதுக்கு மன்றாட? அவன் மனைவியைப் பிரிந்து கிடக்கிற வாதனைக்காக. இல்லறத்தில் இருக்கிறவர்களுக்குப் பெரிய துயரமில்லையா அது? அவர் அங்கி உடுத்தி வந்தாலும் அவருக்கும் இதயம் இருக்கிறதே, அந்தத் துக்கம் விளங்காதா என்ன?
நீ இப்படி கொச்சு தெரிசா நினைப்பும் அந்தப் பொண்ணோட காரியங்களைச் செய்யறதுமா எத்தனை நாள் இன்னும் இருக்கப் போறே? ஃபிஷ் யண்ட் சிப் கடையைத் திறக்கறது இருக்கட்டும், உன்னோட மூலைக் கடை, மளிகை சாமானும், தட்டு முட்டுமா நல்ல வித்துட்டிருந்தியே. அதை இந்தியா போறேன்னு அப்படியே விட்டுட்டியே. தப்பு இல்லியா?
அமேயர் பாதிரியார் முசாபரைக் கேட்டார்.
ரயில் பயணத்தில் மனம் லேசாகிறது. குரிசுப் பள்ளியிலோ, கால்டர்டேல் வீதியிலோ வைத்து முசாபரோடு இதைக் க
மளிகைக் கடையைச் சீக்கிரம் திறக்க சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கு அச்சன்.
முசாபர் சொன்ன போது கொஞ்சம் போல் அதில் சோகம் தட்டுப் பட்டதை அமேயர் பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை.
மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட முசாபரின் பாட்டனார் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்த சிறு வியாபாரி அவர் என்பதும் கால்டர்டேலில் நீண்ட காலம் வசிக்கும் குடும்பங்களில் இவர்களும் உண்டு என்பதும் பூசை நேரம் முடிந்த அரட்டைக் கச்சேரிகளின் போது பாதிரியார் காதிலும் விழுந்ததுண்டு.
அதெல்லாம் வராமலேயே, முசாபர் ஓர் ஆட்டுக் குட்டியாக, இந்த பிரஞ்சுக்கார மேய்ப்பனை, மதம் வேறே என்ற கருதலின்றி வரிந்து கொண்டு கூடவே வருகிறான். கொச்சு தெரிசா கோவிலில் பட்ட குடும்பம் என்பது இந்த உறவை இன்னும் உன்னதப்படுத்தி இருக்கிறது. போய் வந்த இந்தியப் பயணம் அதை இன்னும் பலமாக்கி விட்டது.
லீட்ஸ் போய்ச் சேர இன்னும் முப்பது நிமிஷமாவது ஆகும் அச்சா. அதுவரை என் புராணத்தை கேட்க உங்களுக்குப் பொறுமை உண்டா?