அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

 

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி


ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன். இந்தப் பொண்ணு சுகுணவல்லி என் மடியிலே படுத்து உறங்கியே போய்ட்டா. பாவம் சின்னப் பொண்ணு. அவ அம்மா மேலே விரோதம்னா அவ என்ன பண்ணுவா?

 

கதை முடிஞ்சு அவளை வீட்டுலே கொண்டு விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா,  என்னத்தைச் சொல்ல, வாசல் முறியிலே இவர்  குரிச்சி போட்டு, குரிச்சி இல்லே சாருகசேர, என்னாக்க அதென்ன சாய்வு நாற்காலி அதுலே உக்காந்துண்டிருக்கார். அந்த அமிர்தவல்லி அவர் காலைப் பிடிச்சு விட்டுண்டிருக்கா.

 

அவசரமா உள்ளே ஓடிப் போய்ப் பார்த்தா, கண்ணு குறக்களின்னா காட்டினது. அது கடை உத்தியோகஸ்தன் ஐயனாராக்கும். அவன் சொல்றான் –

 

சாமி கடையிலே இருந்து இறங்கற போது கால் சுளுக்கிடுத்து. பரமக்குடி வைத்தியர் இப்போத்தான் தைலம் காய்ச்சிக் கொடுத்துட்டுப்  போனார் அம்மா.

 

நான் அழுகறதா சிரிக்கறதான்னு தெரியாம நின்னேன். அவனைப் போகச் சொல்லிட்டு நானே தைலத்தைப் பொரட்டி விட்டேன்.

 

என்னமோ தோணிணது. பத்து நாளா, பகலா, ராத்திரியா மனசிலே வச்சிருந்தது எல்லாம் கொட்டிட்டேன்.  பட்டுனு விஷயத்துக்கு வந்துட்டேன்.

 

அமிர்தவல்லி கடைக்கு வந்து போனான்னு எல்லாரும் சொல்றாளே.

 

அவர் காலை மாத்தி வச்சு தைலத்தைப் பூசறதுக்காகக் காண்பிச்சபடி தரையைப் பார்த்தபடி பதில் சொன்னார் –

 

வெத்திலை வாங்க, சோடா குடிக்க வந்தா.

 

கொடுத்தேளாக்கும்?

 

காசு வாங்கிண்டு கொடுத்தேன்.

 

அப்புறம்?

 

நானும் கடை எடுத்து வச்சுட்டு கிளம்பி அவளை வில்வண்டியிலே அவ ஜாகையிலே விட்டுட்டு வந்தேன்.

 

ஓ அவ அவ்வளவு நெருக்கமான சிநேகிதமா ஐயர்வாளுக்கு?.

 

அவர் இல்லை என்றார்.

 

பசு இல்லேன்னா, கன்னுக்குட்டி. சுகுணவல்லி நெருக்கமோ?

 

சே, அது கொழந்தை. நமக்கு பொண்ணு இருந்தா அப்படித்தான் இருப்பா என்றார்.

 

ஏதோ இதிலேயாவது கொஞ்சம் போல என்னை மாதிரி நினைக்கறாரேன்னு நினைச்சபடி அடுத்துக் கேட்டேன் –

 

சுகுணவல்லியை நான் பெத்திருந்தேன்னா அப்படி இருப்பாளா?

 

நீ பெத்திருந்தா உன்னை மாதிரி இருப்பா.

 

அப்போ அமிர்தவல்லி உங்களுக்கு பெத்திருந்தா?

 

இப்போ மாதிரி சுந்தரிப் பெண்குட்டியா இருப்பா. ஆனா,  என் பொண்ணா இருந்தா படிக்காம இருக்க மாட்டா.

 

அவ அழகும் உங்க வாசிப்பும் சேர்ந்திருப்பாளாக்கும் அந்தப் பொண்ணு.

 

இதுக்கு என்ன பதில் சொல்றது?

 

அவர் சொல்லியபடிக்கே நாற்காலிச் சட்டத்தைப் பிடிச்சபடி எழுந்து நின்னார். தரையெல்லாம் பரமக்குடி வைத்தியர் கொடுத்து புரட்டச் சொன்ன தைலம். வீடு முழுக்க கொழும்பு தேங்காயெண்ணெய் வாசனை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன