லோதி ரோடு பக்கம் மைசூர் ஸ்கூல் காண்டீன்லே சுருக்கமா இட்லி, வடைன்னு முடிச்சுக்கலாமே. பத்து நிமிஷம் கூட ஆகாது.
கொஞ்சம் போல் ஊசிப் போன சட்னி தவிர காண்டீன் சாப்பாடு பரவாயில்லை தான். காப்பியை வேண்டாம் என்று சங்கரனுக்கு முன்னால் வசந்தி சொல்லி விட்டாள். அவள் போடுகிற காப்பிக்கு இணையில்லை என்ற திடமான நினைப்பு வசந்திக்கு. பிடார் ஜெயம்மா வேறே அவ்வப்போது வந்து, வசந்தி கையால் காப்பி சாப்பிட்டுத் தன் நன்மதிப்பு சர்ட்டிபிகேட்டை புதுப்பித்துத் தருகிறாள்.
வலப்பக்கம் திரும்புங்கோ. சிடியாகர் இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துலே வந்துடும்.
சிடியா கர் என்ற மிருகக் காட்சி சாலை ஞாயிற்றுக்கிழமைக்கான கூட்டம் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அடைத்து வைத்த சிங்கங்களும், புலிகளும், ஓநாயும் உறக்கம் விழித்து, கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி உறுமிக் கொண்டு மறுபடியும் உறங்கத் தொடங்கின. குழந்தை கை கொட்டி எல்லாம் ரசித்தபடி பூவாகச் சிரித்து, வசந்தி தோளில் இருந்து சங்கரனிடம் தாவினாள். வாடி என் கண்ணே என்று குழந்தையைக் கை நீட்டி வாங்கும் போது அவனுக்கு சுவர்க்கம் தெரிந்தது.
கரடிக் கூண்டில் இரண்டு கரடிகளும் சாவதானமாக உறவு கொண்டபடி உறுமின.
இங்கே வந்தாலும் இதுதானா?
வசந்தி ஓங்கி சங்கரனின் தோளில் அடிக்க என்னமோ என்று பயந்து போன குழந்தை அழுதது. இரண்டு பேரும் அவசரமாக விலகி நடந்தார்கள்.
மயில்கள் வைத்திருந்த மிக உயரமான கம்பி வலை போட்ட வெளியில் இரண்டு மயில்கள் மட்டும் பறக்கத் தொடங்கி இருந்தன. மேலே வலை மூடாத கம்பி மேல் அமர்ந்து அவை கீழே உற்றுப் பார்த்தபடி இருந்தன. சிடியா கர் ஊழியர்கள் தரையில் தானியத்தை விசிறியடித்து அவைகளைத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டும் ஜிவ்வென்று பறந்து சங்கரனின் தோளில் இறக்கை பட வீசி அவன் முகத்தை மறைத்துப் பறக்க அவன் நடுநடுங்கி நின்றான். குழந்தை வீரிடும் சத்தம் இறக்கைகளுக்குப் பின் கேட்க, வசந்தி திரும்பிக் குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு தோளில் சார்த்தி இறுகத் தழுவி, இரண்டடி ஓடி நின்று அலறினாள்.
அடுத்த நொடியில் கீழே இறங்கி தரையில் தானியம் பொறுக்கியபடி மயில்கள் இருக்க, சங்கரன் உடம்பில் நடுக்கம் குறையாது பாதை ஓரக் கல் குவியல்