எட்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ நூலில் இடம் பெறும் சிறு கட்டுரை – ’விடுபட்டவை’ (அக்டோபர் 2009-இல் எழுதியது) –
விடுபட்டவை
லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது.
இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி தவற விட்டேன்?
//
From: rangarajan S [mailto:wri^ @hotmail.com]
Sent: Thursday, July 07, 2005 2:11 PM
To: $$$$@sify.com
Subject: RE: hi from era.murukan (with an interesting blog entry I read today
send one book first preferably a poetry collection if any.
I have read your bombay based story sometime back
Come to ambalam 19 cathedral garden rd on saturday 11 30 if you re free
Desikan also might be there let us meet and talk about cabbges and kings
Sujtha
//
யாருடைய கவிதைத் தொகுப்பு? O.Henry’s short story முட்டைகோசும் அரசர்களும் – என்ன விஷயமாக பேசிக் கொண்டிருந்தோம்? *****ஒன்றுமே நினைவில் இல்லை. ஆனாலும் உறுத்துகிறது.
வாத்தியாருக்கு நான் ஒரு வரி பதில் எழுதியிருக்கக் கூடாதா?
இந்த வாரம் இன்னொரு மனக் குமைச்சலும் கூட உண்டு.
போன திங்களன்று மிக நேர்த்தியாக வடிவமைத்த நாவல் ஒன்று தனியஞ்சலில் வந்து சேர்ந்தது. நித்தியகீர்த்தி எழுதிய ‘தொப்புள்கொடி’.
அட்டையில் போட்டிருந்த இளம்பெண் நித்தியகீர்த்தியா என்று சம்சயம். தெரிந்த முகமாக, ரஜனி திரணகமவின் அன்பு மகள் சாரிகா போல இருந்தது.
ஆற அமரப் படிக்கலாம் என்று மேசையிலேயே வைத்து விட்டு வேறு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வலையில் வேறு ஏதோ தேடப்போக திருமதி சந்திரவதனா பதிவு கண்ணில் பட்டது – ‘தீபாவளி அன்று நித்தியகீர்த்தி மாரடைப்பால் காலமானார்’.
ஒரு வரி, ஒரே ஒரு வரி அவருக்கு கடிதம் எழுதிப் போட முடியாமல் அப்படி என்ன வெட்டி முறித்தேன்?
அசோகமித்திரன் சிறுகதை நினைவு வருகிறது. கீழ் போர்ஷன் காரரைப் பார்க்க வந்து கதவு தட்டி அலுத்துப் போன ஒருத்தர் மேல் மாடியில் இருக்கிற கதைசொல்லியோடு உரையாடுவார். காது சரியாகக் கேட்காத கீழ் போர்ஷன்காரருக்கு ஒரு வேலைக்கான உத்தரவு காத்திருப்பதாகவும் இன்னாரை சந்திக்க வேண்டும் என்றும் செய்தி. மேல் போர்ஷன்காரர் அவரைச் சந்திக்கும்போது சொல்லி அனுப்பி வைக்கக் கோரிக்கை. அவர் மறந்து விடுவார். அடுத்த நாள் கீழ்ப்போர்ஷன் வாசி இறந்ததாகத் தெரிய வரும் . சொல்ல மறந்து போன தகவலின் கனம் அழுத்த கதைசொல்லி மனக்குமைச்சலோடு நிற்பதோடு கதை முடியும்
புரிகிறது, அசோகமித்திரன் சார்.